Sunday, January 20, 2008

கெஞ்சல்

நீ கொடுத்த ரோஜா கண்டு
மனம் உன் பேரில் இரங்கவில்லை...
உன் விழியின் கெஞ்சலில் அன்றோ இரங்கியது....

ஏனோ

ஒற்றைப் பார்வையில்
உயிரைக் குடித்தவன் மேல்
கோபம் கொள்ளாது
பேதை மனம்
ஏனோ கசிந்துருகியது...
அவன் ஒற்றன் அல்லவே....
என் உற்றவன் ஆனதால்!!!

Monday, January 14, 2008

ஏன்??

"மேகத்தின் பின் ஒளியும்
வெண்ணிலா போல் இருக்கிறாய்!" என்றாய் -
அந்த வெண்ணிலவில் தெரிவது
உன் முகம் தானென்று
ஏன் உனக்குப் புரியவில்லை?

கள்வன்

ஆயுதம் ஏந்தாமல்
முகமுடி அணியாமல்
மிரட்டல்கள் மொழியாமல்
என் நெஞ்சைக்
கொள்ளையடித்த
கள்வன் நீயே!!

அன்றும் இன்றும்

அன்று...
மை ஊற்றி எழுதினேன் தன்னால்...
இன்று...
காதல் ஊற்றி எழுதுகிறேன் உன்னால்!!!

நினைவு

தாய் தந்தையின் விரல் பிடித்து
நடை பழகிய நாட்கள் நினைவில் இல்லை...
ஆனால்...
உன் விரல் பிடிக்க வேண்டும் என்பதற்காக
கடற்கரை மணலில் கால்கள் புதைபட
விழுவது போல் நடித்த நொடி மட்டும்
நெஞ்சில் ஏனோ நீங்காத நினைவாக
அலையடித்துக் கொண்டே இருக்கிறது....

பிடிக்கவில்லை...

"உன் கூந்தலில் அந்த ஒற்றை ரோஜா
அழகாய் இருக்கிறது" என்று
நீ கூறிய நாள் முதல்
நான் பூக்கள் சூடுவதையே விட்டு விட்டேன்....
என்னை விட என் பூக்கள்
உன் கவனத்தை ஈர்ப்பது
எனக்குப் பிடிக்கவில்லை!!!

Tuesday, January 1, 2008

ஆசை

அகன்று விரிந்த வானாய் நீ இருக்க..
அதில் நிலவாய் மின்ன எனக்கு ஆசையில்லை...
தூரத்தில் நின்னை நீங்கி நின்றாலும்..
நின்னையே எண்ணும் பூமியாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்!!

கண்ணீர்

அருகில் நீ இல்லாததை எண்ணி
கண்ணில் நீர் தளும்புகிறது..
என் கண்ணின் பாவையாய் நீ இருக்க,
நீர் வழிந்தால் உன் சுவாசம் திணறுமோ?
என்றெண்ணியே என் கண்ணீரை உள்ளடக்குகிறேன்!!!

காத்திருக்கேன்..

ஆத்தோரம் வளர்ந்து நிற்கும்
அந்த ஒத்தை மரத்தடியில்
அச்சாரம் போட்டு வச்சு
அஞ்சாறு மாசமாச்சு

நாளாக நாளாக
நாணல் மட்டும் வளருதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பு
நெஞ்சுக்குள்ள ஏறுதய்யா!!

காலம் கனியட்டும் எனக்
காத்திருந்து காத்திருந்து
நாளெல்லாம் நகருதய்யா
நெஞ்சம் ஏனோ ஏங்குதய்யா

மனையோடு பந்தல் வச்சு
மாலை மாத்தி மேளம் கொட்டி
ஊரறிய உலகறிய உன்
கைப்பிடிக்கக் காத்திருக்கேன்!!

நெஞ்செல்லாம் நெனப்போட,
கண்ணெல்லாம் கனவோட,
மனசெல்லாம் ஆசை வச்சு..
மன்னவனே காத்திருக்கேன்!!

நீயே!!

வானவர்கள் பூமழை தூவவில்லை;
மின்னல் கீற்று தோன்றவில்லை;
நட்சத்திரங்கள் ஜொலிக்கவில்லை;
இதய மணி ஒலிக்கவில்லை;
ஆயினும்...
களவு போன என் இதயம் மட்டும் சொல்கிறது...
நீயே என் காதலன் என்று!!!

எப்படி?

இதயம் வருட வந்த தென்றலுக்கு
எப்படித் தெரியும்?
என் இதயம் என்னிடம் இல்லை என்று!!

ஏனோ தோன்றவில்லை...

கலைந்து கிடந்தது...
மேகம் கொண்ட வானம் மட்டுமல்ல...
என் நினைவும் மனமும் தான்!
மேகத்தினின்றும் சிந்திய மழைத்துளி
மண்ணைச் சேர்ந்ததோ...
சிப்பிக்குள் முத்தாய்ப் போனதோ!
என்னுள் விழுந்த நீ மட்டும்
நினைவில் நிலைத்து...
மனதில் நிறைந்து விட்டாய்!!
சிந்திய மழைத்துளி சென்ற இடம் தேடும் மனதுக்கு...
தான் தொலைந்து போன இடம் தேட ஏனோ தோன்றவில்லை!!!

போதும்

என் உயிரைக் கொல்ல...
கத்தியோ கோடரியோ தேவையில்லை....
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!

என் உயிரைக் காக்க...
கவசமோ கேடயமோ தேவையில்லை....
உன் விழி மூடும் இமைகளே போதும்!!