Wednesday, April 16, 2008

ஏன் இந்த மாற்றம்???

அமைதி என்றும் இனித்ததில்லை...
உன் மௌனம் ஏனோ இனிக்கிறதே!
புயல் என்றும் பிடித்ததில்லை...
உன் கோபங்கள் ஏனோ பிடிக்கிறதே!
மனித மனம் என்றும் புரிந்ததில்லை...
உன் எண்ணம் மட்டும் புரிகிறதே!
நிலவை என்றும் ரசித்ததில்லை...
உன் முகம் தனித்தே தெரிகிறதே!
அலைகடல் நினைவில் நிலைத்ததில்லை...
உன் பேச்சு மட்டும் நிலைக்கிறதே!
துணையை என்றும் விழைந்ததில்லை...
உன் துணை மனம் ஏனோ தேடிடுதே!
மரணம் என்றும் மறுத்ததில்லை...
உன் மனம் என் திசையைத் திருப்பியதே!
வாழ்வை என்றும் விரும்பியதில்லை...
உன் வரவு என்னை மாற்றியதே!
என்னை என்றும் உணர்ந்ததில்லை...
உன் காதல் என்னை உணர்த்தியதே!!!

வழி மேல் விழி வைத்து...

என் நெற்றிச் சிந்துரம் இடுகையிலே
உன் நினைவுகள் நெஞ்சில் நிறையுதடா!
நீ இட்ட குங்குமம் நிலைப்பதுவே
நித்தம் மனம் உருகி வேண்டுதடா!
கண்ணில் நீர் வழிந்தோட
தினம் உன் வரவை எண்ணியே ஏங்குதடா!
தாயும் தாரமும் தவித்திருக்க,
தாயகம் காக்க புறப்பட்ட உன்னை
வீர பத்தினியாக போர் முனைக்கு
அனுப்பிட மட்டுமே மனம் துணிந்ததடா!
நின்னை நீங்கி நிற்கும் வாழ்வில் ஆசையில்லையடா!
நின்னை, என் உயிரைத் திரும்பப் பெறுவேனா?
நினைக்கையில் மனம் கதறி குமுருதடா!
வாராயோ! என் கணவா!! விரைவில் வந்து
என் மனக் குறையைத் தீராயோ....
விழிகளை வழி மேல் வைத்திருப்பேன்....
நீ வரும் நொடிக்காகக் காத்திருப்பேன்....

Sunday, April 6, 2008

விடியலே வா!!!

எந்தன் எண்ணத்தின் பிம்பமே! வா...
என் அருமை இளமகளே! வா...
உன்னை வரவேற்க - உன்
அன்னை அருமையாகக் காத்திருக்கிறேன்!
"பெண்ணாகப் பிறந்தாயே.. சீ! சீ!" என்பர்...
துவளாதே! சாதிக்கப் பிறப்பவள் நீ!
"அடுப்பூதப் பிறந்தாய் நீ!" என்பர்...
நடுங்காதே! நாளைய நம்பிக்கை நீ!
குரலெடுக்க உரிமையில்லை...
உரிமைகள் அளிக்க ஓர் உலகுமில்லை...
தயங்காதே... தடைகளைத் தகர்த்தெறி...
தலையில் குட்டி, உயராது தடுக்க...
புறப்படும் பல படைகள்!!!
பகைவர்கள் பலர் படையெடுத்தாலும்
நம்பிக்கைத் தர நானிருக்கிறேன்....
கண்ணில் கனவுகள் பல...
நெஞ்சின் வேதனைகள் பல...
நினைவின் கருநிழல்கள் பல...
கருவாய் அல்ல - உன்னைக்
கனவாய்ச் சுமக்கிறேன்....
உன் வரவில்...
என் லட்சியங்களின் விடியல்!!!
லட்சியங்கள் நிறைவேற்ற....
நம்பிக்கை ஒளியேற்ற....
எதிர்காலம் தழைக்க....
பெண் சமூகம் செழிக்க....
என் கிழக்கின் உதயமே வா!!!
என் நம்பிக்கைச் சுடரே வா!!!
என் வாழ்வின் விடியலே வா!!!